Thursday, March 3, 2011

மாறிப்போச்சு!


ஊருக்குள் செல்லும்
அந்த ஒத்தையடி பாத
இப்போது
தார்ச்சாலை போட்டுக்கிட்டு
நெளிந்தும், வளைந்தும்.....
கூர வேஞ்சியிருந்த
மந்தையம்மன் கோயிலு
உபயம்:
சித. கரு. லெ. செட்டியார்
என்ற பலகையோடு
கோபுரமும், மார்பிள்
தரையுமா....
புத்தம் புதுசா
பள்ளிக்கூடம்
நான் ஒக்காந்து படிச்சதோ
இப்போது சத்துணவுச்
சமையல்கூடமா
பொலிகாளை
கட்டிக்கெடக்கும்
இடமோ,
இப்போது
தொலைக்காட்சிப்
பொட்டி அறையா
ஊசி போட்டாலே
உண்டாகிவிடும்போது
இப்போது எதற்கு
பொலிகாளை?
கொஞ்சம் நடந்தேன்
சமுதாயக் கெணறு
இருந்த எடத்தில்
ஜவகர் வேலை
வாய்ப்பு
திட்டத்தின் கீழ்
நீர்நிலைத் தொட்டி
கொஞ்சம்
திரும்பினேன்
மாகாணி வீட்டருகில்
ஆரம்ப சுகாதார
நிலையம்
நாட்டு வைத்தியர்
நல்லதம்பிக்கு
நட்டம்தானோ?
கொஞ்சம் நடந்தேன்...
நாங்க கபடி விளையாடும்
பொட்டல் காடு
'நேரு யுவகேந்திராவின்
கிராம விளையாட்டுத்
திடல்'ன்னு
அழகா இருக்குது...
சுப்பையா பிள்ளை
பொட்டிக்கட
அவர் மகனால்
மளிகைக் கடையா
மாறியிருக்குது
"சித்தி அளவுக்கு
அண்ணாமலை இல்ல,
அலைகளும்,
அம்பிகையும்
பரவாயில்லை"
சேலையிலிருந்து,
சுடிதாருக்கு மாறிய
அம்பலகாரர் வீட்டு
பொம்பளைக அரட்டையக்
கேட்டுக் கொண்டே
நடந்தேன்
"உழுகுறதுக்கு
உண்ணாமலை
அண்ணன் டிராக்டரை
கேட்டிருக்கேன்" -
இது அடைக்கன்
கதிரடிக்கும் மெஷின்
கெடச்சுட்டா
பெரிய வய நெல்ல
பொறுக்கிப்புடலாம்" - இது
தெக்கிவளவு பொசலான்
விஞ்ஞானம்
எங்க கிராமத்து
விவசாயத்தையும்
தொட்டிருக்குது!
என் வீட்டுக்கு
திரும்பும் முக்கத்துல
நான் அனுப்பி வச்ச
பணத்தில்
பாதியை புது வீடாக்கி,
என் பெயரும்
பொறிச்சிருந்தார்
விசிறிவிடும்
வேப்பமரத்தையும்
வீதி உலா
காண வைக்கும்
திண்ணையையும்
காரைச் சுவற்றையும்
கூரை வீட்டையும்
காசு காங்கிரீட்டா
மாத்தியிருக்கு
தலையில குத்தப்பட்ட
ஹேர்பின்னா ஆன்ட்டனா
அப்பப்பா....
எத்தனை மாற்றம்?
ஆனா....
இந்த இளவட்டக் கல்
அப்படியே கெடக்குது
அப்போதெல்லாம்
நான் அனாவசியமா
தூக்கும் அந்தக் கல்ல
ஒருமுறை
தொட்டுப் பார்த்தேன்!
மாறாம
அப்படியே கெடக்குது
இப்போதெல்லாம்
என்னால
தொட்டுத்தான்
பாக்க முடியும்
ஏன்னா....
நானும் மாறிட்டேன்
எனக்கு ப்ரஷர்

No comments:

Post a Comment