Thursday, March 3, 2011

மறக்காம வாங்கிக்கடி!


மூன கரையேத்த
முக்காத்துட்டுக்கு
வக்கில்ல
இதுல நாலாவதும்
குத்த வச்சா
நான் எங்கே போறது?
ரோட்டுக்கு தார் ஊத்தி
அவரு வாங்கும்
சொற்பக் கூலி
வீட்டுக்கு
கஞ்சி ஊத்தவே
காணலியே....
என்ன செய்வேன்?
இதுல....
நாலையும்
கரை சேத்து
நான் எப்ப
பொதையிறது?
செட்டியாரு
தோட்டத்துல
களை எடுத்தா காசு வரும்!
நெலம் உள்ள
மகராசாவுக்கு
'பயிரு' சோறு போடும்
எங்களப்போல
நெலமத்த கூலிக்கோ
'களை' தானே
கஞ்சி ஊத்தும்
இப்படிக் களையெடுத்த
கூலியில கால் பவுன்
செஞ்சி போட்டேன்
திருவிழாவுக்கு போன
மூளி திருகாணியத்
தொலைச்சு வந்தா
எங்கடி போட்டன்னா
"போட்ட எடம்
தெரிஞ்சாத்தான்
பொறுக்கிக்கிட்டு
வர மாட்டேனா"ன்னு
அப்பனப்போல் அப்பப்ப
நக்கலுக்கு கொறச்சலில்ல
மூத்தது இப்படின்னா
மிச்ச மூனும்
கொறஞ்சதில்ல!
காது கிழிய
பேசுதுக
காரியத்துல வீரியமில்ல
எம்பொறப்பே
போராட்டமா
போயிருச்சே
பொன்னழகி
என் வவுத்த
பெருக்க வச்ச
பொறுப்பில்லா
மனுசனுக்கு,
வருவாயப் பெருக்குறதுக்கு
வழி தெரியாம
போயிடுச்சு
பகலெல்லாம்
பசுவாட்டம்
பசுமையா
இருக்குறவரு
ராவான மட்டும்
ராட்சசனா ஆவாரு....
சிறுக்கி நானும்
சேந்துதானே
கூத்தடிச்சேன் -
இப்ப நாலுக்கும்
வழி காட்ட முடியாம
நிக்கிறேனே
படுக்கத்
தெரிஞ்ச எனக்கு
தடுக்கத்
தெரியாம போயிருச்சே
எனக்கு வாச்சவனும்
சமத்தில்ல -
வந்ததுகளும் கருத்தில்ல...
'ஆண்டவன்
கொடுக்கிறான்'னு
அடுத்தடுத்து
பெத்தெடுத்து....
ஒடம்பு
கொலஞ்சு போச்சு
குடும்பம்
விரிஞ்சு போச்சு
இப்பல்லாம் ஏதேதோ
வந்துருச்சாம்
புருசன் பொண்டாட்டி
சேர்ந்தாலும்
புள்ள உருவாகாதாம்
கூப்பன் கடையிலகூட
கொடுக்கிறாகளாம்
கேட்டியாடி?
என்னப்போல
பெண்ணை பெத்து
சீரழிஞ்சு நிக்காதே
மண்ணென்ணை
வாங்குறப்ப
மறக்காம வாங்கிக்கடி!

No comments:

Post a Comment