Thursday, March 3, 2011

அஞ்சுவருசம் போச்சேப்பு!


ஆர்.ஐ., தாசில்தார்,
ஏட்டு, ரைட்டரு,
வி.ஏ.ஓ., வெட்டியான்,
கூப்பங்கடைக்காரன்,
போஸ்ட்மேன், லைன் மேன்
இந்த
எட்டுப் பேரும் கூடித்தான்
நாட்டை நடத்துறதா
நம்புகிற மக்கள் இவர்கள்
ஆத்தா களத்தில்
விரித்துவிட்டுப் போன
நெல்லுக்கு
கோழி விரட்டும் குச்சியோடு
காவல் காத்து நிற்கும்
சிறுவன்
போதிய இடைவெளி
இல்லாது பிறந்த தம்பிக்கு
அம்மா அடைத்துக் கொடுத்த
புட்டிப்பாலை புகட்டிக்
கொண்டிருக்கும் சிறுமி
கூரைக்கு ஓடுகளும்
வகுப்புக்கு போதிய மாணவர்களும்
இல்லாது
சூனியர் விகடன்
படித்துக் கொண்டிருக்கும்
வாத்தியாரும்
ஓராசிரியர் பள்ளியும்
ஊர் மரியாதைய
எல்லா ஊரிலும்
பிடிபடாமல் காத்துவிட்ட
பெருமிதத்தில்,
கம்பீரமாய் நிற்கும்
ஊர்க் கோயில் மாடு
பல்லாங்குழி,
தாயக்கட்டை,
கபடி,
சீட்டுக்கட்டு,
ஏட்டுக்காசு,
இவற்றோடு
ஊக்க மருந்து
உட்கொள்ளாத வீரர்கள்
விரித்து விட்ட
மயிற்றுக்குள்
முகத்தை மூடி
குனிந்து உட்கார்ந்து
தலை கொடுத்து
அமர்ந்திருக்கும்
கருப்பாயி
அதில் மாமியாள
கரிச்சுக் கொட்டிக்கிட்டே
பேன் வேட்டையாடும்
பெத்தாயி
"ஒருமழை பேஞ்சா போதும்
வடக்கிவயல் நெல்லை
பொறுக்கிப்புடலாம் -
கூத்தக்கெழவா
மழையக் கொண்டாந்து
எறக்கப்பா"
கிராம தெய்வத்திடம்
விண்ணப்பம் வைக்கும்
சின்னப்பன்
"நம்ம ஊரு ஓட்ட
யாருக்கு போடுறதுன்னு
ஊரு கூடி,
முடிவு செய்யணுமாம்
இன்னைக்கி ராத்திரி
ஊர்க் கூட்டம் இருக்கு
வீட்டுக்கு ஒருத்தரு
தவறாம கலந்துக்கணும்
சாமியோவ்"
தண்டோரா அடிச்சுப்
போனான் அழகன்
போனமுறை
அதப் பண்றோம்,
இதப் பண்றோம்னு
சொன்னத நம்பி
அவுகளுக்கு
ஓட்டுப் போட்டோம்
ஓட்டுப் போட்ட விரலுக்கு
ஒரு துளி மையத் தவிர
ஒன்னும் கெடக்கல
இந்த முறை ஏமாறப்புடாது
கண்மாய்க்கு மடையும்
காளி கோயிலுக்கு
மண்டபமும்
கட்டித் தரச்
சம்மதிக்கிறவங்களுக்கே
நம்ம ஊரு ஓட்டு,
நூத்தம்பதையும் போட்டுப்புட
வேண்டியதுதான்
அம்பலக்காரரு அழுத்திச்
சொன்னாரு
ஊரும் ஒத்துக்கிச்சு
"ஆனா ஒரு கண்டிசன்....
ஓட்டுப்போட
புதுவளவு பள்ளிக்கூடம்
போய்வர
நம்ம ஊரு சனத்துக்கு
தனியா வேன் வைக்கணும்னு
தவறாம சொல்லிப்புடுங்க"
மச்சக்காளை கட்டன்ரைட்டா
சொன்னாரு -
"செயிச்சுட்டா கட்டுவாரு
தோத்துட்டா
என்ன பண்ணுவாரு?
அதனால -
பேசாம மடைக்கும்
மண்டபத்துக்கும்
ஆகும் கட்டுமான அடக்கத்த
முன்கூட்டியே ரொக்கமா
வாங்குங்கப்பா
கட்டளைப் பிள்ளை
விட்ட ஆலோசணைக்கு
வெகுவான ஆதரவு.....
'சரி அப்படியே
பேசிப்புடலாம்'ன்னு
ஊரு தீர்மானத்த
மனசுல சுமந்துக்கிட்டு
அம்பலக்காரரு,
அடைக்கண்,
கோயில் வீட்டு அழகு
இன்னும் பத்துப்
பதினைஞ்சு பேரா
கட்சி ஆஃபீசுக்கு
கண்டனூரு போனாக....
ஓட்டுக்கு நிக்கிறவரப் பாத்து
ஊரு முடிவச் சொன்னாக!
"ஒங்க ஊரு சனம்
சொன்ன வாக்கக்
காப்பாத்தும் தப்பில்ல,
ரேட்டும் ஓ.கே. தான்
ஆனா....
ஒங்க ஊரு
ஓட்டெல்லாம்
ஓட்டு லிஸ்ட்டுல
விட்டுப் போச்சே....
இனிமே சேக்குறதுக்கு
இப்போதைக்கி வழியில்ல
அதனால...
அடுத்த முறை பாக்கலாம்"
ஓட்டுக்கு நிக்கிறவரு
ஒருவழியா சொன்னபோது
அசந்து போச்சு ஊருசனம்!
"கண்மாயும், காளியும்
கொடுத்து வச்சது
அவ்வளவுதான்!
என்ன பண்ணுறது...
நம்ம ஊரு இருக்கிறத
நாடே மறந்துடுச்சே
அச்சடிச்ச மெசினால
அஞ்சு வருசம் போச்சேப்பு
'உச்'சு கொட்டுச்சு ஊரு!

No comments:

Post a Comment